கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரம் கால்பந்து விளையாட்டிற்கு கிடைப்பதில்லை என்றும் கால்பந்து விளையாட்டிற்கு இந்திய அரசு முதன்மை இடத்தை தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கோவை: இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு முதன்மை இடத்தை தர வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கால்பந்து விளையாடும் சிறுவர்களுடன் நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில், கால்பந்து விளையாட்டிற்கு மத்திய மாநில அரசுகள் முதன்மை இடத்தை தர வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரம் கால்பந்து விளையாட்டிற்கு கிடைப்பதில்லை என தெரிவித்த அவர்கள் கிரிக்கெட் விளையாட்டு ஒரு சூதாட்டம் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் உட்பட திராவிட கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"அனைத்து மாவட்டங்களிலும் கால்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் எனவும் கால்பந்து விளையாட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்கள் மத்தியில் இப்போட்டிக்கான ஊக்கத்தை உருவாக்க வேண்டும்", என்று தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.
தற்போது, கட்டாரில் FIFA உலக கால்பந்து ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.