பாண்டியன் நகரில் உள்ள மாநராட்சி துவக்க பள்ளியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பழங்கால நாணய கண்காட்சியில், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், இந்திய மற்றும் வெளிநாட்டு பழங்கால நாணயவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் சங்ககால நாணயங்கள், ஒரு அணா, அரை அணா, ஒரு பைசா, இரண்டு, மூன்று, ஐந்து பைசா உள்ளிட்ட அனைத்து வகையான நாணயங்கள், இந்திய அரசால் வெளியிடப்பட்ட அனைத்து சிறப்பு நாணயங்கள் மற்றும் இந்தியாவின் பழைய நாணயங்கள் என அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மேலும் இலங்கை, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா போன்ற வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் டாலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த கண்காட்சியில் 500க்கு மேற்பட்ட நாணயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில் மாணவர்களும், பெற்றோர்களும்பங்கேற்று ஆர்வத்துடன் நாணயங்களை பார்வையிட்டனர்.