பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் முருகேசன்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், துறை அலுவலர்கள் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகாரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். அதை விசாரித்த ஆட்சியர் சமீரன் உதவி இயக்குனரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து அலுவலக அதிகாரிகள் கூறும் போது: அரசு துறை அலுவலங்களில் ஏராளமான பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு பல விதங்களில் பாலியல் தொந்தரவு ஏற்படுகிறது. அவர்கள் புகார் தெரிவிக்க ஆட்சியர் தலைமையில் விசாகா கமிட்டி செயல்படுகிறது.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அனுப்பியிருந்தார். அதன் உண்மை தன்மையை நிரூபிக்க வீடியோவும் சமர்ப்பித்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
முதல் கட்டமாக நிர்வாக ரீதியாக உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். புகார் உண்மையாக இருப்பின், துறை ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.