கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் துணை வட்டாட்சியர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்காளர் அட்டை பெற ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது, புதிய வாக்காளராக பதிவு செய்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில், சுங்கம் சந்திப்பு அருகே உள்ள நிர்மலா மகளிர் கலை கல்லூரியில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளம் வாக்காளர்களை வாக்களிக்க வைக்கும் வகையில் இன்று கோவை நிர்மலா கல்லூரி மாணவர்களிடையே 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் அட்டை பெற ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின், துணை வட்டாட்சியர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவிகளுக்கு புதிய வாக்காளராக சேர்வதற்கான 'படிவம்-6' விண்ணப்பம் வழங்கப்பட்டது.
உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் தபால் துறையின் மூலம் வீடுகளுக்கே புதிய வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொண்டு வரும் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.