குந்தா தாலுக்காவிற்குட்பட்ட பாலக்கொலா கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 213 பயனாளிகளுக்கு, 1.23 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.
நீலகிரி: உதகை அருகே உள்ள பாலக்கொலா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. அதில் 6 நபர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான விபத்து நிவாரண உதவி தொகையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையான 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
மேலும் 23 பயனாளிகளுக்கு 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 81 பயனாளிகளுக்கு 56.70 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 10 பயனாளிகளுக்கு 37.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 4 சுய உதவிக்குழுக்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.
கூட்டுறவு வங்கி சார்பில் 25 பயனாளிகளுக்கு 17.55 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி, வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தேயிலை பறிக்கும் இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் என மொத்தம் 213 பயனாளிகளுக்கு 1.23 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.