வாசகர் மன்ற துவக்க விழாவில் பேசிய எஸ்.என்.எம்.வி கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் லெனின் பாரதி, மாணவர்களுக்கு கற்பனைத்திறன், சீரிய சிந்தனைகள், பகுத்தறியும் தன்மை வளரவும் புத்தக வாசிப்பு அவசியம் என்றார்.
கோவை: கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாசகர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆங்கிலத்துறை விரிவுரையாளர் பிரேமா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வாசகர் மன்றம் குறித்து அறிமுகவுரை ஆற்றினார்.
துணை முதல்வர் முனைவர். வரதகுரு, துறைத் தலைவர்கள் சரவணன், சண்முக சிவகாமவள்ளி, G.T. சுதா ஆகியோர் இந்த நிகழ்வை வாழ்த்தி பேசினர்.
இந்நிலையில், இந்த நிகழ்வில், எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவரும், நூலக வாசகர் வட்டத் தலைவருமான பேரா.க.லெனின்பாரதி வாசகர் மன்றத்தை துவக்கி வைத்து "வாசிப்பின் அவசியம்'' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, அறிவை விரிவு செய்யவும், ஒருவரின் தனித்துவத்தை வெளிக்கொணரவும், கருணை கொண்ட மனிதராய் வாழவும், ஆழ்மன அமைதிக்கும், ஆக்கத்திறன், கற்பனைத்திறன், சீரிய சிந்தனைகள் வளரவும், பகுத்தறியும் தன்மை வளரவும், நினைவாற்றல் கூடவும், மனதை உற்சாகப்படுத்தவும்,
மனம் புத்தாக்கம் பெறவும், தனிமையை வெல்வதற்கும், கவனத்தை கூர்மையாக்கவும், தகவலறிவு மேம்படவும், சொற்களஞ்சியத்தை வளப்படுத்தவும், கருத்துகளை சரியான முறையில் வெளிப்படுத்தவும், ஒருவர் சிறந்த சமூக ஆளுமையாக வளரவும் புத்தக வாசிப்பும், நூலக பயன்பாடும் மிக மிக அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பல்வேறு அறிஞர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் முடிவில் வாசகர் மன்ற மாணவர் பொறுப்பாளர் J. ஜெரோம் ஹில்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.