செம்மிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்தின் மீது மற்றொரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், பனியன் நிறுவன பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பல்லடம் மற்றும் செம்மிபாளையம் பகுதியில் இருந்து பேருந்தின் மூலம் ஊழியர்களை அழைத்துச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்களை அழைத்துச் செல்லும் பேருந்து பல்லடம் பகுதியில் பணியாட்களை ஏற்றிக் கொண்டு செம்மிபாளையம் சென்று அங்கிருந்த ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.
பேருந்தை ஓட்டுனர் அபூர்வராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து, பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்தினை பார்த்த அப்பகுதி மக்கள் பல்லடம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்து விட்டு பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.