நீலகிரி மாவட்டம் கெத்தை மலைபாதையில் உலா வந்த காட்டு யானைகள், கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை திடீரென வழிமறித்த நிலையில், பயணிகளிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் உலா வரும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை மாவட்டத்திற்கு செல்லும் மூன்றாவது மாற்றுப்பாதையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்கு சென்றுள்ளது.
அப்போது கெத்தை மலைப்பாதையில் உலாவந்த ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள்சாலையின் குறுக்கே திடீரென வழிமறித்து நின்றன. இதனை கண்டு அச்சமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பிறகு யானை கூட்டம் மெதுவாக சாலையில் நடந்து சென்றன.நீண்ட நேரம் யானை கூட்டத்திற்கு பின்னால் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் அச்சத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனையடுத்து, பேருந்தை ஓட்டுனர் வழக்கம்போல் கோவையை நோக்கி இயக்கிச் சென்றார். சாலையில் சென்ற அரசு பேருந்தை யானைகள் திடீரென வழிமறித்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், காட்டு யானைகள், சாலைகளில் உலா வருவதையும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.