இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தை போல், இந்தி பேசாத மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, மேற்குவங்க சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருவதாக திருப்பூரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்.
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது . 60 அடி சாலை பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் .
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம் , கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருகின்றன.
இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடியஅதிக அளவிலான மக்கள் வேலைதேடி தமிழகத்திற்கு தான் வருகின்றனர்.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை, திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி பாஜக கட்சியினரை போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. ஆனால் அவர்களை குறைக்கூற போவதில்லை, பெரும்பாலான அதிமுகவினர் திமுகவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
விரைவில் எடப்பாடி பழனிச்சாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களையே காட்டிக் கொடுத்த அவரை திமுக சேர்த்துக் கொள்ளாது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான். ஆனால், பாஜக திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி.
தமிழகத்தில் மது கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதாக பாஜக தலைவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் கஞ்சா விற்பனையாளர்கள் அனைவரும் பாஜகவில் உறுப்பினராகி இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பொதுக் கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் சார்பில் அன்பளிப்பு பொருள் வழங்கப்பட்டன. அன்பளிப்பு பொருள் வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .
இதனிடையே கூட்டம் கட்டுக்கடங்காமல் சேர்ந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தனர் . இருப்பினும் டோக்கம் பெற்ற சிலருக்கு அன்பளிப்பு பொருள் கிடைக்காதததால் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.