தெலுங்குபாளையம் அருகே உள்ள வாய்க்கால் சோதனைச்சாவடி அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவ்வழியாக கோழித்தீவன லோடுடன் வந்த ஈச்சர் லாரியின் சக்கரம் சாலை அருகே தோண்டப்பட்ட குழியில் சிக்கியது.
கோவை: கோவை சிறுவாணி சாலை தெலுங்குபாளையம் அருகே உள்ள வாய்க்கால் சோதனைச் சாவடி அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலப் பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் அந்த சாலையில் ஓரத்தில் வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக கோழித்தீவன லோடுடன் வந்த ஈச்சர் லாரியின் சக்கரம்சாலை அருகே தோண்டப்பட்ட குழியில் சிக்கியது. இதனால், அந்த சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நிற்கக்கூடிய காட்சிகளை பார்க்க முடிந்தது. எனவே, அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு, குழியில் சிக்கிய ஈச்சர் லாரி மீட்கும் முயற்சியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் லாரியை வெளியே எடுக்க முடியாததால், கூடுதல் பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால்,காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.