திருமலையம்பாளையம் வருவாய் கிராமத்தில் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு 287 பயனாளர்களுக்கு 1.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். பின்னர், மதுக்கரை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மதுக்கரை ஒன்றியம் திருமலையம்பாளையம் வருவாய் கிராமத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தினரும் ஒரு குழுவாக சென்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் இதர அரசு சேவைகளும் மக்கள் தொடர்பு முகாம் மூலமாக வழங்கப்படும்.
அதன்படி, இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மக்களின் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கலந்துரையாடினார்.
இன்று நடைபெற்ற முகாமில், மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு 287 பயனாளர்களுக்கு 1.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், "கோவை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமானது மாதந்தோறும் நடத்தப்பட்டு, மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நடைபெறும் முகாமிற்கு ஒருமாதத்திற்கு முன்பாகவே, துறைவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான நலத்திட்ட உதவிகளும் இந்த முகாம்களில் வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று, மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்தி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராமத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற வகையில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்து, மக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவுத்தம்பதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் குழந்தை திருமணத்தை நடத்த மாட்டோம் என்று அந்த ஊர் மக்கள் உறுதி எடுத்ததை மேற்கோள் காட்டி, அதுபோல் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்", என்று ஆட்சியர் தெரிவித்தார்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் மக்களுடைய பிரச்சனைகளை அவர்களுடைய இடத்திற்கே சென்று கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஆட்சியர் சுட்டிக்காட்டினார்.
இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், திருமலையம்பாளையம் பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) பண்டரிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர், மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்படி, மதுக்கரை திருமலையம்பாளையத்தில் மொத்த காய்கறி விற்பனை மையம் அமைக்க தொடர் கோரிக்கைகள் எழுந்த நிலையில், விற்பனை மையம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனையடுத்து, பிச்சனூர் கிராமத்தில் அமைந்துள்ள சிறுவாணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட ஆட்சியர், பொருட்களின் தரம் மற்றும் விற்பனை விலைகளை கேட்டறிந்தார்.
அதே போல் பிச்சனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட குடிநீர் தொட்டி மற்றும் செங்குத்து உறிஞ்சு குழி அமைக்கும் பணி, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன் கட்டப்பட்டு வரும் பால் குளிர்விப்பான் நிலைய பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், பிச்சனூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மல்பெரி செடிகள் மற்றும் பட்டுப்புழு வளர்வதற்கு ஏற்ற உகந்த சூழ்நிலை மதுக்கரை வட்டாரத்தில் உள்ளதால் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பட்டுப்புழு உற்பத்தி செய்யபட்டு வருவதால், பட்டுக்கூடு நிலையில் இருந்து பட்டுநூல் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.