கோவை ராஜவீதியில் உள்ள வசந்த் ஜுவல்லரியில் இருந்து ஹைதராபாத்துக்கு 6 கிலோ அளவிலான நகைகளை எடுத்துச் சென்ற ஊழியர் நடராஜன் செல்போனை அணைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை ராஜவீதியில் ஏராளாமான நகை கடைகள், நகை பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலம் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தங்க நகைகள் ஆபரணமாக்கி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பெண்களை ஈர்க்கும் வகையிலான டிசைன்களை செய்து நகை ரீடைல் மற்றும் ஹோல் சேல் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் தொழில் நகரங்களில் கோவைக்கு தனியிடம் உண்டு.
இந்த நிலையில் கோவை ராஜவீதியில் ரோகினி வசந்த் எனபவருக்கு சொந்தமான வசந்த் ஜுவல்லரி என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. இதனிடையே வசந்த் ஜுவல்லரிக்கு ஹைதராபாத்தில் இருந்து பல்வேறு நகை ஆர்டர்கள் வந்திருக்கின்றன.
அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி (18-10-2022) அன்று கடையிலிருந்து தங்க நகை ஆபரணங்களை ஹைதராபாத்திற்கு அக்கடையின் ஊழியரான நடராஜன் விநியோகம் செய்வதற்காக எடுத்து சென்றுள்ளார். கோவையை சேர்ந்த நடராஜன் இந்த நகை கடையில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள சில நகைக்கடைகள் ஆர்டர் தந்திருக்கும் நிலையில், அவர்களிடம் நகைகளை ஒப்படைத்து விட்டு ரசீது பெற்று பண பரிவர்த்தனையை பாலோ செய்வது தான் இவரது பணி.
இந்த நிலையில் 6,273 கிராம் தங்க நகைகளுடன் நடராஜன் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், நகைகளை ஆர்டர் தந்த கடைகளுக்கு ஒப்படைக்காமல் நடராஜன் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு மாயமானதாக கூறப்படுகிறது.
அவர் எடுத்துச் சென்ற நகைகளின் மதிப்பு சுமார் 3 கோடி ஆகும். இது குறித்து தங்க நகை கடை உரிமையாளர் ரோகினி வசந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை தேடி வருகின்றனர்.
3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் நகைக்கடையில் பணியாற்றிய ஊழியரே மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.