திருப்பூர் சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்த சுமன் என்கிற மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை பல்லடம் காவல்துறை கைது செய்து விசாரணை.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டும் இன்றி வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுமன் (25) என்ற வாலிபர் நேற்று மாலை நிறுவனத்தில் இருந்து தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த 2 பேர் சுமனை வழிமறித்து வேறு நிறுவனத்தில் சம்பளம் அதிகம் பெற்று தருவதாகவும் அதற்கான இன்டர்வியூக்கு சென்று வரலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் சுமனை அழைத்து சென்ற அவர்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து பெற்றோர் மற்றும் நண்பர்களின் தொடர்பு எண்களை பெற்று சுமனை கடத்தி உள்ளதாகவும் பணம் வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சுமனை தனி அறையில் கட்டி வைத்து தாக்குவது போன்ற வீடியோவை சுமனின் பெற்றோருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் சுமனின் நண்பர்கள் சுமன் பணியாற்றி வரும் பனியன் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கவே நிறுவன நிர்வாகிகள் பல்லடம் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் பல்லடம் டி.எஸ்.பி செளமியா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்லடத்தை அடுத்த உப்பிலிபாளையத்தில் ஒரு அறையில் சுமனை அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அறையில் அடைத்து வைத்திருந்த சுமனை மீட்டதோடு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த அஜீத்குமார் (29) சிவகங்கையை சேர்ந்த சுப்ரமணி, பழனிகுமார், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் , ஹரிஹரன் மற்றும் பெங்களூரை சேர்ந்த சமீர் உஸ்மான் ( 26) ஆகிய 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல கடந்த 8 மாதங்களுக்கு இதே பகுதியில் ஒரு வடமாநில தொழிலாளியை பணம் கேட்டு கடத்திய சம்பவத்தில் அஜீத்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பட்டது குறிப்பிடத்தக்கது.