சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவு சுவர் எழுப்ப மண் எடுக்கும் நிகழ்விற்காக திருப்பூருக்கு வருகை தந்த திரைப்பட இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமாருக்கு உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர்: சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட 1,040 வீரா்களின் நினைவை போற்றும் வகையில் நாட்டில் 75 இடங்களில் நினைவு சுவா் எழுப்பப்பட உள்ளது. இந்த நினைவு சுவா்களை எழுப்ப சுதந்திர போரட்ட வீரா்களின் நினைவிடங்களில் மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஊர்களில் மண் சேகரிக்கும் நிகழ்வாக தாய்மண் யாத்திரை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் சக்ரா விசன் இந்தியா பவுண்டேசன் சார்பில் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள பொங்காளி முதலியார் நினைவு இடத்திற்கு வருகை தந்த இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, உள்ளிட்டோர் பொங்காளி முதலியார் திருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான இடுவம்பாளையத்தில் இயக்குநர்கள் மண்ணை சேகரித்து சென்றனர். முன்னதாக இடுவம்பாளையம் பகுதிக்கு வந்த இயக்குனர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.