சமீபத்திய கார் வெடிப்பு சம்பவதையடுத்து, கோவையில் மத நல்லிணக்கத்தை பேணும் விதமாக, இன்று காலை ஜமாத் அமைப்பினர் மற்றும் கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
கோவை: கோவையில் உள்ள இந்து - முஸ்லீம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது, அரசியல் கட்சியினர் தயவு கூர்ந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள், என ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பெரிய பள்ளி வாசல், சிறிய பள்ளி வாசல், கேரளா ஜமாத் உள்ளிட்ட 3 ஜமாத்தை சேர்த்த நிர்வாகிகள், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை சங்கமேஷ்வரர் கோவில் நிர்வாகிகளை சத்தித்து இன்று காலை ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னதாக, கோவிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாகத்தினர் அங்கவஷ்த்திரம் அணிவித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் குருக்களுடன்ஜமாத் நிர்வாகிகள் உரையாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியகோவை மாவட்ட சுன்னத் ஜமா அத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா கூறும் போது:
கோட்டை மேட்டில் இருக்கூடிய 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளி வாசல், கேரளா முஸ்லீம் ஜமாத் ஆகிய 3 ஜமாத் நிர்வாகிகள் மதநல்லிணக்க வருகையாக கோட்டை சங்கமேஷ்வரன் கோவில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம்.
கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவானதை நாம் அறிவோம், இஸ்லாமியர்களாக நாங்கள்7 தலைமுறைகளாக கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில், உள்ள சங்கமேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள தெருவில் மசூதிகள் உள்ளது.
ஒவ்வொரு பண்டிகையின் போதும் விருந்தோம்பல் வழங்கி சுமார்200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் கார் வெடிப்பு சம்பவத்தை கோட்டை மேடு ஜமாத்துகள் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாம் ஒரு போதும் வன்மைறையை தூண்டும் மார்க்கம் அல்ல,. நாங்கள் அமைதியை போதிக்கிறோம்.
இங்கு வாழக்கூடிய மக்கள் அண்ணன் தம்பி என சகோதரத்துவத்துடன், வாழ்ந்து, சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு நல்லிணக்கதோடு வாழ விரும்புகிறோம்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் உள்ள ஜமாத்துகள் இணைந்து பல்வேறு வர்த்தக ரீதியாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு இணைந்து நற்பணிகள் செய்து குறித்தும் திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம்.
எந்த விதமான மத பூசலுக்கும்,அரசியலுக்காக ஆட்பட கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற தாரக மந்திரத்தை முன்னெடுத்து இணைந்து செயல்பட உள்ளோம். இது குறித்து இன்று கோவில் நிர்வாகத்தினரிடம் உரையாட வந்த ஜமாத் அமைப்பினருக்கு உரிய மரியாதை அளித்து வரவேற்றனர்.இதற்கு ஜமாத் சாரபில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அனைவரும் ஒற்றிணைந்து தமிழகத்தில் மத அமைதிக்கு, மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக கோவையை மாற்றுவோம். எந்த வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்கமாட்டோம். எந்த விதத்தில் பயங்கரவாதம் வந்தாலும் இடம் கொடுக்க மாட்டோம்.
இந்த கோவில் குருக்கள் சிறு வயதில், எங்களோடு இங்கு விளையாடியதை நினைவுகள் பகிர்ந்தோம். தேர் போன்ற விசேஷங்கள் போது, இப்பகுதியில் உள்ள கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு கொடுத்ததை அவர்கள் நினைவு கூறினார்கள்.
நீண்ட ஆண்டுகள் தேர் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில்,கடந்த 5 ஆண்டுகள் முன் தேர் திருவிழா நடைபெற்ற போது, முழு ஒத்துழைப்பு கொடுத்ததை நாங்கள்நினைவு கூர்ந்தோம்.
நாங்கள் அண்ணன், தம்பியாக தான் பழகி வருகிறோம். நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள் தான். கோவில் நிரவாகிகள் பள்ளி வாசலுக்கும் விரைவில் வருவார்கள். கோவையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. அரசியல் கட்சியினர் தயவு கூர்ந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள், நாங்கள் அமைதியானவர்கள்,அமைதியாக வாழவிடுங்கள், என தெரிவித்தனர்.