பரம்பிக்குளம் அணையின் பழுது வேலைகளை பார்வையிட் வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் "இரு ஷட்டர்களின் பராமரிப்பு பணியில் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது மொத்த பணியும் முடிந்ததும் பெய்யும் மழை நீரின் ஒரு சொட்டு வீணாகாமல் தடுக்கப்படும்” என தெரிவித்தார்.
கோவை: இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் வரிசையில் முதன்மையான இடம் வகிக்கும் பரம்பிக்குளம் அணை தமிழ்நாடு - கேரளா வனப்பகுதியில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது.
இந்த அணையின் நீரானது பொதுமக்களின் குடிநீர் தேவையை கடந்து வேளாண் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுகின்றது. அதே போன்று பரம்பிக்குளம் அணை ஆழியாறு உள்ளிட்ட அணைகளுக்கான நீர் ஆதாரமாகவும் விளங்குகின்றது.
சமீப நாட்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு பழதடைந்தது. இதனால் பெருளவு நீர் வீணாக கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பொது மக்களின் அளித்த புகாரின் பெயரில் பழுதான மதகு சரி செய்யும் பணியானது போர்காலப் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.
பழுதான மதகு சரி செய்யும் பணியை இன்று (02.11.2022) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் அமைந்துள்ள நீர்பாசன திட்டங்களில் முக்கியமான திட்டம் பரம்பிகுளம் ஆழியாறு பாசனத்திட்டமாகும். பரம்பிக்குளம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மூன்று மதகுகளின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது கடந்த 24.09.2022 அன்று அதில் ஒரு மதகின் ஷட்டரை தாங்கும் சங்கிலி அறுந்த காரணத்தால் ஷட்டர் பழுதடைந்து 8 டி.எம்.சி தண்ணீர் வீணாக ஆற்றின் மூலம் கேரளா வழியாக கடலில் கலந்துவிட்டது.
முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், ஆகியோர் உடனடியாக அணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் மதகு பழுதான சம்பவத்தை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, புதிய ஷட்டர் அமைக்க சுமார் ரூ.7.20கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
போர்காலப் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்போது அதனைத் தொடர்ந்து, ஷட்டரினை அணையில் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
மேலும் இரு ஷட்டர்களின் பராமரிப்பு பணியும் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளில் 90சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் வருகின்ற 20.11.2022 க்குள் நிறைவடையும். அதற்குபிறகு பெய்யும் மழை நீர் ஒரு சொட்டு வீணாக்காமல் தடுக்கப்படும்.
இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் பயனடைவார்கள். என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பெருவாரிப்பள்ளம், கிணத்துக்கடவு, சர்க்கார்பதி பகுதியில் உள்ள அணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.