அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் பொருட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியதாவது, கோவையில் வெடிகுண்டு மற்றும் இன, மத, கலவரங்கள் நடைபெறுவதை முறியடித்து கோவை மாநகர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
கோவை மாநகரில், அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் வரும் 17-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத, மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைவரும் கலந்து கொள்ள கூடிய வகையில், ஒரு அமைதி பேரணியை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள முன்வர வேண்டும்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மின்சார கட்டணம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த நிலையில், ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் கட்டணத்தை குறைக்காமல், மேலும் உயர்த்தியுள்ளது.
மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. எனவே, மாதம் ஒரு முறை மின் கட்டணம் அளவீடு செய்யும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும்.
24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தி நாளை விருதுநகரிலும், நவம்பர் 3-ம் தேதி தென்காசியிலும், நவம்பர் 4-ம்தேதி திருநெல்வேலியிலும், நவம்பர் 5-ம் தேதி தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.