கோவை ராமநாதபுரம் அருகே நகர சபை கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர், பருவமழையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது என்றும், ஒன்றரை லட்சம் புதிய மின் கம்பங்கள் தயாராக உள்ளது எனவும் கூறினார்.
கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது, கோவைக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முதல்வரால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அனைவரும் 24 மணி நேரமும் பணி செய்ய தயாராக உள்ளனர். மின்வாரியமும் தயார் நிலையில் உள்ளது. ஒன்றரை லட்சம் புதிய மின் கம்பங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அரசியல் கோமாளி என விமர்சித்தார். அவர் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அவர் தான். தொலைக்காட்சிகளில் கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது.
பத்திரிகையாளர்கள் குறித்து கோமாளி சொன்னது போல நாங்கள் ஏதாவது கருத்து சொல்லி உள்ளோமா?. பத்திரிகையாளர்கள் மீது அக்கறை கொண்ட அரசு தற்போதைய தமிழக அரசு.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.