நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட கார் விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி: திருப்பூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தனது குடும்பத்தினர் உட்பட 9 பேருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக திங்கள் கிழமை காரில் வந்துள்ளனர்.
வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை திருப்பூர் முருகன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.
அப்போது மலைபாதையில் குரும்பாடி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
கார் மோதியதில் மரம் சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பிகள் கார் மீது விழுந்தன. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த 5 ஆம்புலன்ஸ்கள் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதனால் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இரண்டாவது சீசன் முடிவடைய இருப்பதால் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதையடுத்து போலீஸார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குன்னூர் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது.