கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, இனியாவது விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும் - எஸ்.பி. வேலுமணி.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளின் பட்டியல் தயாரித்து முதல்வருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த 10 கோரிக்கைகள் கூட்டம் நடைபெற்றது. இன்று உறுப்பினர் மேம்பாட்டு நிதி பாதி தான் வந்துள்ளது. மீதம் உள்ள பாதி நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
கோவையில் எல்லா சாலைகளும் பழுதடைந்துள்ளது. சாலைகளை செப்பனிடும் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமான கோரிக்கையாக வைத்துள்ளோம்.
கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 வருடங்களுக்கு முன்னர் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கோவை மாநகர் பின்னோக்கி சென்றது. இதனால் வளர்ச்சி பாதித்தது.
அந்த குண்டு வெடிப்பு பாதிப்புகள் இன்னும் உள்ளது. இதனால் இரு சமூகமும் பாதிக்கப்பட்டது. அந்த தாக்கத்திலிருந்து இப்பொழுதுதான் கோவை மீண்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த வேலையும் பார்க்கவில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்த அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே செய்கின்றனர். முதலமைச்சருக்கு பணம் வாங்கித் தரும் வேலையை மட்டும் ஜஜி டேவிட்சன் செய்கிறார்.
எனவே, இனியாவது விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த மதத்தையும் ஒதுக்கக்கூடாது.
கோவை மக்கள் அமைதியை விரும்புகிறோம். மக்களை பாதுகாக்கும் வேலையை காவல்துறை பார்க்க வேண்டும், கோவையை காப்பாற்ற வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.