கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் நேற்று ஒரு பகுதியில் உள்ள வீட்டின் மீது இராட்ச பாறைகள் உருண்டு விழுந்ததால் வீட்டின் சுவர் சேதமடைந்தது. விபத்தின் போது, வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் அரசு பட்டா வழங்கிய நிலத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவர் தனது மகள், வசந்தகுமார், பேத்தி சசிகலா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை லீலாவதி மற்றும் சசிகலா அவரது குழந்தைகளுடன் வீட்டில் இருந்த போது, வீட்டின் சுவர் மீது ஏதோ மோதியது போல சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, அருகே இருந்த சிறு பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியது தெரியவந்தது. அப்போது, திடீரென அருகே மற்றொரு இராட்ச பாறை உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியதில், சுவரின் ஒரு பக்கம் உடைந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவறிந்து வந்த மதுக்கரை போலீஸார் மற்றும் மதுக்கரை வட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய கவுசல்யா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் வீடு சேதம் அடைந்துள்ளதால், போதிய அரசு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.