வெள்ளலூர் குப்பை கிடங்கின் நிலை குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளருக்கு 2 மாதம் கால அவகாசம் டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது பல லட்சம் டன் குப்பைகள் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக குப்பை கிடங்கை அகற்ற வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஒரு ஆண்டிற்குள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இதுவரை அங்கிருந்த குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் ஈஸ்வரன் மீண்டும் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குள் வெள்ளலூர் குப்பை கிடங்கு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைக் குவியல்களுக்கு இடையே சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக்குழு வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, குப்பைகளை அகற்ற 15 மாத காலம் அவகாசம் வழங்கியது.
மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வரும் பணி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.