கோவை மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கோவை: கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி அருகேயுள்ள பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகள் அமைக்கப்படாததை கண்டித்து மாமன்ற கூட்டம் நடக்கும்போது தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரபாகரனின் இந்த போராட்டம் காரணமாக திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடைய மேயர் கல்பனா குறுக்கிட்டு அதிமுக ஆட்சி செய்த பத்து ஆண்டுகள் நீங்க என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், இனி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், மன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக்கூறி நீங்கள் வெளியே செல்ல அறிவுறுத்தினார்.
இச்சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.