கோவை ஜி.கே என்.எம் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியரை அவரது கணவர் மருத்துவமனை வளாகத்தில் வைத்து சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் மனைவியை, கணவனே சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நான்சி (32) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
மனைவியில் நடத்தையில் சந்தேகமடைந்த வினோத் அவ்வப்போது நான்சியுடன் பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, நான்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் செவிலியர் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், தனது மனைவி நான்சிக்கும் மற்றொரு நபருக்கும் பழக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த வினோத், இன்று காலை வழக்கமாக நான்சி மருத்துவமனைக்கு பணிக்கு வந்தபோது கத்தியுடன் பின் தொடர்ந்துள்ளார்.
பின்னர் 3 மணியளவில் நான்சி பணிபுரியும் மகப்பேறு பிரிவிற்கு சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை கொண்டு நான்சியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நான்சி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற கொலையால், நான்சியின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அங்கு விரைந்த போது வினோத் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் மருத்துவமனை காவலர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

அப்போது மனைவியை கொலை செய்த அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற ரேஸ் கோர்ஸ் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் அங்கிருந்த சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணவன் - மனைவி இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்து வந்த காரணத்தால், மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சுந்தரராஜன், குடும்ப சண்டை காரணமாக அவரது கணவர் நான்சியை கத்தியால் குத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வினோத்திற்கு தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.
பிரபல மருத்துவமனை வளாகத்தில் பணியின் போது செவிலியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.