கோவை மாவட்டம் வீரப்பனூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் இவ்வருடத்திற்கான கோவை மண்டல அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளின் இறுதியாக இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 2, 3) கோவை மண்டல அளவிலான தடகள போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில், கோவை மண்டல அளவில் 36 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1100 பேர் கலந்து கொண்டனர்.
இதன் துவக்க விழாவானது இன்று சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், இத்துவக்க விழாவில் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டுக் கொடியை சிறப்பு விருந்தினர் அறிமுகப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து, கொடியேற்றுதல், சுடர் தீபம் ஏற்றுதல், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ்.நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.செந்தில்நாதன் வரவேற்புரையும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜே.சுரேஷ் நன்றியுரையும் வழங்கினர்.
மேலும், நாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கு கோவை மாநகர போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ்.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களும், சுழற்கோப்பைகளும் வழங்கவுள்ளார்.