புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் உணவு டெலிவரி ஊழியரை கொடூரமாக தாக்கி செல்போன், இரு சக்கர வாகனம், பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பலையூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகன் ஸ்ரீ விக்னேஷ் (18). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஸ்ரீ விக்னேஷ், தனியார் உணவு டெலிவரி (zomato) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல ஸ்ரீ விக்னேஷ் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் வந்துள்ளார். அப்போது ஏ.ஆர்.சி சந்திப்பு அருகே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஸ்ரீ விக்னேஷ் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவரை மது அருந்த வருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர் வர மறுத்ததால் அவரது இரு சக்கர வாகனத்தை அந்த மர்ம நபர்கள் பிடுங்கியுள்ளனர். இதனால் அவர்களுடன் ஸ்ரீ விக்னேஷ் கவுடம்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளடாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு அந்த மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு மீண்டும் விக்னேஷை மிரட்டி இரத்தினபுரி ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மேலும் சில நபர்களுடன் சேர்ந்து அந்த மர்ம கும்பல் ஸ்ரீ விக்னேஷ் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்தஅவரிடமிருந்த 22 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.1,500 பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை அந்த மர்ம கும்பல் பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் முகம், தலை, முதுகு பகுதியில் கடுமையான காயங்களுடன் ஸ்ரீ விக்னேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.