கிருஷ்ணசாமி லே அவுட் குடியிருப்பு வாசிகள் தூர்வாரப்பட்ட குட்டையில் மீண்டும் கட்டிட இடிபாடுகளை கொட்டி ஒரு பகுதியை மூடிவிட்டனர். ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத செயலை ஆராய்ந்து அரசுப்பதிவேடுகளில் நடந்த முறைகேடுகளை விசாரித்து குட்டையை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் டி.கோட்டம்பட்டி கிராமத்தில் உள்ள குட்டையில் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியதாவது:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் டி.கோட்டாம்பட்டி வார்டு எண்.H, பிளாக் எண் 3 நகர அளவை எண் 13-இல் சுமார் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக மழைநீர் தேங்கி குட்டையாக இருந்து வருகின்றது.
இதனருகில் விவசாய நிலங்கள் உள்ளன. இக்குட்டையானது அரசு பதிவேடுகளில் மந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1990 இல் ஒரு பகுதி விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டது.
இது தற்போது கிருஷ்ணசாயி லே அவுட்டாகவும் மகாலட்சுமி நகராகவும் உள்ளது. மேற்பட 1995 - 1996 இல் நடந்த ஆய்வில் மந்தையானது சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இக்குட்டையின் அருகில் வார்டு எண்:H, பிளாக் எண்:3 நகர அளவை எண்:12 இல் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் வார்டு எண்:H பிளாக் எண்:3 நகர அளவை எண்:13 இல் உள்ள குட்டை பகுதி சாலையாக மாற்றப்பட்டுள்ளது ஏற்க இயலாது.
மேலும், கிருஷ்ணசாமி லே அவுட் மற்றும் மகாலட்சுமி நகர் குடியிருப்பு வாசிகள் இக்குட்டையை கழிவுநீர் குட்டையாக மாற்றியது மட்டுமல்லாமல் கட்டிட இடிபாடுகளைக் கொண்டு தொடர்ந்து மூடிவருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மெகா தூய்மைப்பணித் திட்டத்தின் கீழ் 20.09.2021 லிருந்து 25.09.2021 வரை இக்குட்டை தூர்வாரப்பட்டது.
இந்நிலையில் 28.12.2021 அன்று அருகில் வசிக்கும் கிருஷ்ணசாமி லே அவுட் குடியிருப்பு வாசிகள் மீண்டும் கட்டிட இடிபாடுகளை கொட்டி இக்குட்டையின் ஒரு பகுதியை மூடிவிட்டனர். எனவே இங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயலை ஆராய்ந்து அரசுப்பதிவேடுகளில் நடந்த முறைகேடுகளை விசாரித்து குட்டையை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.