மின்கம்பி உரசியதில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியான நிலையில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவை அருகே டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து ஓட்டுநர் பலியான சம்பவம் குறித்துபெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக இரவு-பகலாக நடைபெற்று வருகிறது.
சாலை அமைப்பதற்கு தேவையான தார் கலவை மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் காரமடையில் ஒரு இடத்தில் வைத்து தயார் செய்யப்பட்டு இங்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் கரூரை சேர்ந்த ஆறுமுகம் (32) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தினமும் இரவு பணி நடக்கும் போது காரமடைக்கு டிப்பர் லாரியில் சென்ற தார் கலவை ஏற்றி வருவது வழக்கம். இன்று அதிகாலை 3 மணிக்கு ஆறுமுகம் லாரியை எடுத்து கொண்டு காரமடைக்கு சென்றார். பின்னர் அங்கு தார் கலவையை ஏற்றி கொண்டு 4 மணியளவில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே குமரபுரம் பகுதியில் சாலை பணி நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து ஆறுமுகம் லாரியில் இருந்த தார் கலவையினை சாலையில் கொட்டுவதற்கு ஹைட்ராலிக் மூலம் (தானியங்கி எடை தூக்கி) இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதி அங்கிருந்த மின்கம்பியில் உரசியது. உரசிய வேகத்தில் லாரியில் தீப்பற்றியது.
சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான ஓட்டுநர் ஆறுமுகம் உயிர் தப்பிப்பதற்காக டிப்பரை கீழே இறக்கும் லிவரை பிடித்து இறங்க முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடலில் தீப்பிடித்து எரிந்தது.
வலி தாங்க முடியாத அவர் அலறி துடித்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருகே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவரை காப்பாற்ற போராடினர். ஆனால் அதற்குள்ளாகவே ஆறுமுகம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள்ளாகவே லாரி முற்றிலும் எரிந்து சேதம் ஆகிவிட்டது. இதையடுத்து, தீயை முழுவதும் அணைத்து, உயிரிழந்த லாரி டிரைவர் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.