44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடை ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.
கோவை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நடை ஓட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கோவையை சேர்ந்த பல்வேறு தனியார் கல்லூரி (ஹிந்துஸ்தான், கற்பகம், ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி) மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் 2022 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடை ஓட்டம் மேற்கொண்டனர்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த நடை ஓட்டம் வ உ சி மைதானம் வழியாக சென்று மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் வந்தடைகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து வெளியில் வரும் வரை மாணவர்களுடன் நடை ஓட்டம் மேற்கொண்டார்.
இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் லோகா பதாகைகளை ஏந்தியும் செஸ் ஒலிம்பியாட் குறித்தும் பதாகைகளை ஏந்தி நடை ஓட்டம் மேற்கொண்டனர்.