கோவை மருதமலை வி.சி.க நகர் பகுதியில் உள்ள வீட்டை காட்டு யானைகள் சூறையாடிய நிலையில், ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்தியது.
கோவை: கோவை மருதமலை வி.சி.க நகர் பகுதியில் உள்ள வீட்டை காட்டு யானைகள் சூறையாடிய நிலையில், ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்தியது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை, மருதமலை அடிவாரம் அருகே வழக்கமாக வரும் காட்டு யானைகள் அடிக்கடி வி.சி.க நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் மலையில் இருந்து குட்டியுடன் இறங்கிய 6 காட்டுகள், வி.சி.க நகர் அருகே வந்துள்ளது.
அங்கிருந்த, பாண்டியம்மாள் (65) என்பரது வீட்டின் சுவரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
வழக்கமாக வீட்டில் பாண்டியம்மாள் மற்றும் அவரது பேரன் ரவி சுந்தர் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம் பாண்டியம்மாள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், ரவி சுந்தர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
ஆனால், நேற்று தனது கல்லூரி நண்பர் வீட்டிற்கு அவர் தூங்கச் சென்றதால் வீட்டில் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
காட்டு யானை கூட்டமானது, வி.சி.க நகர் பகுதியில் இருந்து இந்திரா நகர் வழியாக பொன்னையராஜபுரம், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் யானை மடுவில் முகாமிட்டது.
பின்னர், ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள வேணுகோபால், மலர்கொடி தம்பதிகளின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்திவிட்டு. பின்னர், நீண்ட நேரத்திற்கு பின் அந்த யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.
வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்திய யானைக் கூட்டத்தால் மருதமலை அடிவாரம் பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.