இச்சம்பவம் குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், சுல்தான்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சூலூர் அருகே ஓடும் அரசு பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்து பெண் அழகு கலை நிபுணர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் சக்திவேல். பால் பாக்கெட் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிவசக்தி இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காகக் காலை அரசு பேருந்தில் பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டார். பேருந்து கோவை சுல்தான்பேட்டை அருகே வந்தபோது, ஓட்டுனரின் இருக்கைக்குப் பின் அமர்ந்திருந்த சிவசக்தி, திடீரென எழுந்து படிக்கட்டு பக்கம் வந்து வாந்தி எடுத்துள்ளார்.
அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் பேருந்து சக்கரத்தில் தலையில் சிக்கியதில், சிவசக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது கணவர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், சுல்தான்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.