70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என கூறிய அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து மாமன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கோவை மாநகராட்சியில் 12 லட்சம் மக்கள் மீது சொத்து வரி உயர்வு சுமத்தப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தின்படி 3 நாட்களுக்கு முன்பே தீர்மானங்களை கவுன்சிலர்களுக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால் நேற்று இரவு 8 மணிக்கு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர் இதனை மாமன்ற உறுப்பினர்கள் எப்படி படித்து இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதில் 70 தீர்மானங்கள் வந்துள்ளது. ஆனால், இதில் உள்ள 70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க இது திமுகவிற்கான ரகசிய கூட்டமாக நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார்.