ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகாஷ் (31) என்பவரை அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.
கோவை: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலிப்பதில் முறைகேடு செய்து இருப்பது தொடர்பாக நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மைசூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இந்த சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகாஷ் (31) என்பவரை அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த வாகாஷ் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13 ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கைதி போக்குவரத்து பிடியாணை பிறப்பித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் உத்திரவிட்டார்.
இதனையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த வாகாஷ், கோவை நீதிமன்றத்தில் இருந்து டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும், உள்துறை அமைச்சக ஊழியர்கள், தன்னார்வலர்கள், இடைத்தரகர்கள் இணைந்து கூட்டாக மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிஐ அதிகாரிகள் உள்துறை அமைச்சக ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, நாடு முழுவதும் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதுடன் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.