இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி, கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிரீன் கிளீன் அமைப்பினர் அறிவிப்பு.
கோவை: இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி, கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிரீன் கிளீன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர், இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் வருகிற ஜூன் இரண்டாம் தேதி கொண்டாடப்படுவதாகவும், அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில், கிரீன் கிளீன் என்ற அமைப்பு சார்பில், நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டனர்.
கிரீன் கிளீன், என்ற தங்களது அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் ஆற்றி வருவதாகவும், தற்போது சுற்றுச்சூழலை மையப்படுத்தியே இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.
பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் அதிக அளவில் மரங்களை நட்டு அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த இசை நிகழ்ச்சியில், இளையராஜா பங்கேற்பார் என்றும் தென்னிந்திய இசை உலகில் முன்னணி பாடகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று அறிவித்தனர்.
15,000 முதல் 20 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளவர் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நிகழ்ச்சியில், சாமானிய மக்களும் பங்கேற்கும் வகையில் குறைந்த அளவிலான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக, இசை நிகழ்ச்சிக்கான முத்திரை மற்றும் போஸ்டர் ஆகியவற்றையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டனர்.