திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதில் எத்திலீன் மூலம் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: மாம்பழ சீசன் துவங்கியுள்ள சூழலில் அனைத்து பல கடைகளில் மாம்பழங்கள் குவியத் தொடங்கியுள்ளது.
சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், பங்கனபள்ளி, இமாம் பசந்த், நடுச்சாலை என பல ரகங்களில் மாம்பழங்கள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் கெமிக்கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் திருப்பூர் அரிசி கடை வீதி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மாம்பழ கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், நான்கு கடைகளில் சுமார் 2 டன் மதிப்புள்ள மாம்பழங்களை எத்திலீன் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாம்பழங்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை அழித்தனர். மேலும், அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எத்திலீன் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை உண்டால் பல்வேறு உடல் உபாதைகள் வரும் என்பதால், அடிக்கடி உணவுத்துறை அதிகாரிகள் இதுபோல் ரெய்டு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.