கோவை தடாகம் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதுள்ளது.
கோவை: கோவை தடாகம் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதுள்ளது.
கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு தடாகம் காப்புக்காடு அருகே வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது.
மேலும், யானை இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால், யானையின் உடலில் திரவம் வழிவது போன்ற சுவடு இருந்துள்ளது.

எனவே, இறந்த யானைக்கு ஆந்திராக்ஸ் பாதிப்பு இருக்கலாம், என வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

இதனால், மாஸ்க் போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இறந்த யானையின் அருகே சென்று திரவ மாதிரிகளை ஆந்த்ராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையின் முடிவில், யானைக்கு ஆந்திராக்ஸ் இல்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, மாலை நேரம் ஆனதால், நாளை காலை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு நடைபெறும், என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இறந்தது பெண் யானை என்பதால், யானை கர்ப்பமாக உள்ளதா? என்பது உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், சிறுமுகை வனச்சரகம், பவானி அணை நீர் தேக்கம் அருகே ஒரு பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்டு குட்டியுடன் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கோவை வனக்கோட்டத்தில் ஒரு பெண் யானை இறந்துள்ளது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.