கோவை துடியலூர் பகுதியில் குடிபோதையில் அரசுப்பேருந்து இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை: கோவையில் குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டி கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கக்குச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகு (31). தற்போது கோவை நீலம்பூரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தற்காலிக அரசு பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் ரகு அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது துடியலூர் ஜி.என்.மில்ஸ் அருகே வந்த போது வேகமாக வந்த பேருந்து முன்னால் சென்ற டாக்ஸி மீது பலமாக மோதியுள்ளது.
இதையடுத்து, டாக்ஸியில் இருந்து இறங்கி வந்து ரகுவிடம் கேட்டபோது, அவர் மது போதையிலிருந்தது தெரியவந்தது. இதனால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் போதையிலிருந்த அரசு பேருந்து ஓட்டுநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூடினர்.
மேலும், அவர் நீண்ட தொலைவாக மதுபோதையில் வேகமாக அரசு பேருந்தை இயக்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் ரகுவை பொது மக்களை பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, துடியலூர் போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.