பொதுத்தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3-மாதம் அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: பொதுத்தேர்வு முடியும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது, 3 மாதம் அவகாசம் வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்தும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இதனிடையே, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீரபாண்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களது குடியிருப்புக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று துவங்குவதற்காக வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த 3-மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ராயபுரம் கருவம்பாளையம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் காவல்துறை துணை ஆணையர் ரவி மற்றும் மூன்றாவது மண்டல துணை ஆணையர் வாசுவிக்ரம் மற்றும் நான்காவது மண்டல துணை ஆணையர் செல்வநாயகம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நாளை முதல் பொதுத்தேர்வு துவங்குவதால் பொதுத்தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3-மாதம் அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.