மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து, இந்திய நிறுவன தேசிய கயிறு வாரிய மாநாடு, நாளை மே 5ம் தேதி, லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெறவுள்ளது.
கோவை: மத்திய, மாநில, யுனியன் பிரதேசங்களுடன் இணைந்து சிறப்பான தென்னை நார், கயிறு மேம்பாட்டுக்கான திட்டங்களை கலந்து ஆலோசனை செய்ய, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து, இந்திய நிறுவன தேசிய கயிறு வாரிய மாநாட்டினை நாளை மே 5ம் தேதி, லீ மெரிடியன் ஓட்டலில் நடத்துகிறது.
75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் "ஆசாடி க அம்ரித் மகோத்சவ்" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த மாநாட்டில், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராகவும், இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வெர்மா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு நார் தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவும், சிறந்த முறையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநில அரசுகள் முக்கிய பங்காற்றிடவும் வழி வகுக்கப்படும். மேலும், புதுமையான படைப்புகள் குறித்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்க, இந்த மாநாடு ஒரு தளமாக அமையும்" என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மாநாட்டின் தொடர்ச்சியாக காயர் மாரத்தான் போட்டி “ரன் பார் காயர்" நிகழ்ச்சி கோவை நேரு விளையாட்டு அரங்கில் மே 6-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கருத்தாக்கம், “உலக வெப்பமயமாதலை மீட்க தீர்வு - கயிறு நார்" என்பதாகும்.
நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக கயிறு வாரியம் 2015-16 முதல் 2018 -19 வரை சிறப்பாக செயல்பட்ட 27 தென்னை நார், கயிறு தொழிற்சாலைகளுக்கு 44 விருதுகள் வழங்கப்படுகிறது. ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில் முனைவோர், சிறப்பாக செயல்படும் கூட்டுறவு மற்றும் தொகுப்புகள் போன்றவையும் விருதுகளை பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில், புதிய பொருட்கள், புவிசார் கயிறு ஜவுளி பொருட்கள், நார் மரம், நார் மெத்தை, தரை விரிப்புகள் குறித்த நான்கு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. நார் தயாரிப்பின் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் அதன் பயன்பாடுகள், மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்குகள் நடக்கின்றன. தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று கருத்துரை, கட்டுரைகள் வழங்க உள்ளனர்.
தென்னை பயிராகும் மாநிலங்களின் அமைச்சர்களோடு மத்திய அமைச்சர்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடி, தென்னை மேம்பாட்டுக்கும், கயிறு தொழில் வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்கப்படும். மேலும், இந்த தொழில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.

நாளை நடக்கவுள்ள மாநாட்டில், காயர் விகாஷ் யோஜ்னா பற்றிய செயல் திட்டம், தென்னை பயிரிடுதல் மற்றும் தேங்காய் உற்பத்தியின் அவசியம், தென்னை மட்டைகளின் பயன்பாட்டினை அதிகரித்தல், கயிறு துறையில் மதிப்பு கூட்டு பொருட்கள், மத்திய மாநில அரசு துறைகளில் நார் பொருட்களின் கட்டாய கொள்முதல், கயிறு வாரியத்தின் சந்தை மேம்பாட்டு உதவி திட்டங்கள், ஏற்றுமதி வசதி வாய்ப்பு திட்டங்கள், நார் துறையில் உள்ள கடன் வசதி திட்டங்கள் மற்றும் பல திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன.