விமான நிலையம் அருகாமையில் அமைந்துள்ள சிட்ரா பஸ் ஸ்டாப் அருகே உள்ள சாக்கடை கால்வாய் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண விமான நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையமானது, கோவை உள்ளிட்ட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. தினமும் சராசரியாக33 விமானங்கள் இங்கு இயக்கப்படுவது வழக்கம் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு சேர்த்து).
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு, பின் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால், கோவை விமான நிலையத்தில், ஒரு நாளில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், விமான நிலைய ஓடு தளத்தில் பரவைகளால் அவ்வப்போது இடையூறு ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்கும் மற்றும் புறப்படும் போதும், பறவைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தாலும், விமான நிலைய சுற்றுச்சுவரின் பின்புறம் நான்கு திசைகளிலும் கழிவுகள் கொட்டப்படுவதே பறவைகள் அங்கு அதிகளவில் கூட காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
எனவே, இதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியோடு இணைந்து விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கோவை விமான நிலையத்தில் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது.
இதற்கு, சிட்ரா பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ள சாக்கடை கால்வாய் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண விமான நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
மாதம் 3 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதுகின்றன:
இது குறித்து கோவை சர்வதேச விமானநிலையஅதிகாரிகள் கூறியதாவது: விமானங்கள் புறப்படும் போதும் தரை இறங்கும் போதும், பறவை, நாய், முயல் உள்ளிட்ட விலங்குகளை விரட்டும் பணியில் ஆறு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அவர்களிடம் பறவைகளை விரட்டுவதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 'Zone Gun'வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலைய சுற்றுப்புற பகுதிகளில் இறைச்சி குப்பை கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், சிட்ரா பகுதியில் அமைந்துள்ள பெரிய சாக்கடை கால்வாய், பறவைகள் விமானங்கள் மீது மோதும் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியோடு இணைந்து சிட்ரா பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு, பறவைகளால் விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில்தேவையான நடவடிக்கைமேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
பறவைகளை விரட்டுவது மட்டுமின்றி, விமான நிலைய வளாகத்திற்குள் முயல்கள் நடமாட்டமும் உள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முயல் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறை இப்பணி மேற்கொள்ளும் போதும் 20 முயல்கள் பிடிபடுகின்றன. பின்பு ,அவை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு விடப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் விமானங்கள் பாதுகாப்பாக தரை இறங்கவும், புறப்பட்டு செல்லவும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் விமான நிலைய நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பயணிகள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.