கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 சவரன் செயினை பறித்து சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பகவுண்டர். இவரது மனைவி காளியம்மாள் (65). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் திருமணம் முடிந்து தனியாக உள்ள நிலையில், தனது இளைய மகனுடன் காளியம்மாள் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் காளியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 25-வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் பத்து நிமிடங்களாக அதே இடத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த அந்தப் பெண் காளியம்மாவிடம் இந்த பகுதியில் உள்ள கோவில் குறித்து பேச்சுக் கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணுடன் வந்த ஆண் காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 1/2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு, இருவரும் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.
சம்பவம் தொடர்பாக காளியம்மாள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற அந்த மர்ம நபர்களை அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று கலிக்க நாய்க்கன்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தன. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும்போது உள்ளே தங்க கட்டி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக விசாரணை செய்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் விசாரணையில் சோமயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (20) தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருவதும், அவருடன் உடன் வந்த பெண் நண்பர் சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி (20) என்பதும் தெரிந்தது.
இருவரும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க பல்வேறு நண்பர்களிடம் பணம் வாங்கியதாகவும் திருப்பி கொடுக்க முடியாததால் பெண் நண்பருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.