குடும்ப தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் வந்த ஒடிசா மாநில இளைஞரின் கையை கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்தனர்.
கோவை: கை துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறியதாவது:-

8.04.2022 அன்று அதிகாலை 1.30 மணியளவில் 21-வயது கணேஷ் என்னும் ஒரிசா மாநில இளைஞர் தெரிந்த நபரால் குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையிலும் மேலும், தலை, கழுத்து, முதுகுப் பகுதியிலும் வெட்டுக் காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8.04.2022 அன்று காலை 5.50 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
அதிக காயங்களால் இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. அவர்கள் துண்டிக்கப்பட்ட கைப் பகுதியினை சுத்தமாக ஈரத்துணியில் சுற்றி பிளாஸ்டிக் பையில் வைத்துக் கட்டி அதனை ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டியில் வைத்து கைப்பகுதி நேரடியாக ஐஸ்கட்டியில் படாதவாறு பாதுகாத்து எடுத்து வந்திருந்தனர்.
மேலும் அவரை பரிசோதித்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் (துறைத் தலைவர்: V.P.ரமணன், R.செந்தில்குமார், S.பிரகாஷ், A.கவிதாபிரியா, S.சிவக்குமார், மயக்கவியல் நிபுணர் சதிஷ் ) துண்டிக்கப்பட்ட கையினை இணைக்க முடிவு செய்தனர்.
மேலும், அவருக்கு இரத்தம் செலுத்தப்பட்டு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு காலை 8 மணியாவில் அறுவைசிகிச்சை தொடங்கப்பட்டது. அறுவைசிகிச்சை 5 மணி நோரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு எலும்புகள், தசை நரம்புகள், இரத்தக் குழாய்களையும் இணைத்து துண்டிக்கப்பட்ட கைக்கு உயிர் ஊட்டினர்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் கடந்த நிலையில் அந்த இளைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் உள்ளார். அந்த இளைஞருக்கு பல இலட்சங்கள் மதிப்புடைய உயர்தர அறுசைசிகிச்சையை பிளாஸ்டிக் சர்ஜரி துறை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்தனர்.
இந்த முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த முதல்வர் A.நிர்மலாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.