கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
கோவை: இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள்:-
1. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் நீண்ட காலமாக விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு 25-ஆயிரம் ஐம்பதாயிரம் முறையிலும் மற்றும் தக்கல் முறையில் மூன்று லட்சம் வரை பணம் செலுத்தி வரும் முறையிலும் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது சிலர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மேற்கண்ட திட்டம் முடிந்து விட்டபடியால் விண்ணப்பத்தை ஏற்க மறுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதற்கு விண்ணப்பித்த காத்திருக்கும் விவசாயிகளுக்கு கோவை மாவட்டத்தில் ஒதுக்கீடு முடிய பெற்றிருக்குமானால் மற்ற மாவட்டங்களில் மீதமுள்ள ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2. அழிந்துவரும் நெற்பயிரை ஊக்குவிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான நல்லூர் வயல், செம்மேடு, இக்கரை போளுவாம்பட்டி போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிகப்படியான விவசாயிகள் நெல் பயிரை சாகுபடி செய்து செய்துவரும் நிலையில் சமீப காலங்களாக அரசு போதிய கவனம் செலுத்தாததினால் விவசாயிகள் நெல் சாகுபடியை குறைத்துக்கொண்டே வருவதாகவும், எனவே நெல் சாகுபடியை ஊக்குவிக்க ஒரே கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
3. பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள காய்கறிகள் முதன்மை பதப்படுத்தும் மையத்தை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கோவை மாவட்டத்தில் பூலுவப்பட்டி, சூலூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் முதன்மைப்படுத்தும் மையங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்ததாகவும், தற்போது கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வரை திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்களை தினம்தோறும் கமிஷன் மண்டி உள்ளுர் சந்தைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும், எனவே அந்த மையங்களை உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
4. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட தடுப்பு அணைகளை தூர்வார வேண்டும்.
கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டதாகவும், இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் நிலத்தடி நீரை சேமிக்கும் பொருட்டு ஊரகப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாகவும், தடுப்பணைகள் கட்டப்படும் போது அதற்கான நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் மற்றும் அதிக நீர் சேமிப்புக்கான வழிவகைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தடுப்பணையை ஒட்டி முட்புதர்கள் அடர்த்தியாக வளர்ந்து உள்ளதாகவும் மழைக்காலங்களில் வரும் மழைநீர் தேங்காமல் வடிந்து போடி விடுவதாகவும் எனவே தடுப்பணைகள் தேங்கியுள்ள மணல் மேடுகளை அகற்றி முட்புதர்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5. கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் புதிதாக அமைக்க வேண்டும்.
கோவை மாவட்டம் சூலூர் சோமனூர் கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் பஞ்சாலைகள் மற்றும் சைசிங் மில்கள் உள்ளதாலும் கால்நடைகள் பாதுகாப்பிற்கு பட்டறை அமைக்கப்பட்டு வருவதாலும், அப்பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அவினாசி பல்லடம் பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து சேருவதற்கு நீண்ட நேரம் ஆவதால் கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
6. தனியார் மூலம் நடத்தப்படும் இ சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்களில் 60-ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படும் நிலையில் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இ சேவை மையங்களில் 500- முதல் 600-ரூபாய் வரை ஒரு விண்ணப்பத்திற்கு வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அதிகமாக வசூல் செய்யும் தனியார் சேவை மையங்களில் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இசேவை மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்படும் தொகையின் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகிய கோரிக்கைகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
