விசாரணையில், பிடிபட்ட நபர்கள் மதுக்கரையை சேர்ந்த பிரபாகர் (26). அஜித்குமார் (25) என்பதும், அவர்கள் இருவரும் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்பவரிடம் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர்.
கோவை திருமலையம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்ததை அடுத்து, கே.ஜி சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பாலக்காடு சாலை திருமலையம்பாளையம் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு நபர்களை, பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 350 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை அழைத்து சென்று சோதனை செய்த போது மேலும் 1.1 கிலோ கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் மதுக்கரையை சேர்ந்த பிரபாகர் (26). அஜித்குமார் (25) என்பதும், அவர்கள் இருவரும் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்பவரிடம் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அதனை இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த கே.ஜி. சாவடி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.