கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என என்று கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில், உதவி ஆணையர் மாரிச்செல்வி முன்னிலையிலும், சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்தாலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கூறுகையில், "தமிழகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளாகிய அனைவரது கடமையும்", எனக் கூறினார்.
கூட்டத்தில், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கூறுகையில், "குமுதம் நகரில் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், கிணற்று நீரை பயன்படுத்தும் நிலை உள்ளதாகவும் பல இடங்களில் குறைவான அளவில் தண்ணீர் வருவதாகவும்", தெரிவித்தார்.
"பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதால், குடிநீரை சேமித்து வைக்கும் அளவில் வீடுகளில் தொட்டிகள் இருப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகள் தற்போது வந்துள்ளதால், நேரடியாக மக்கள் எங்களிடம் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களது, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது எங்கள் கடமை. அதிமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினை எந்த அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றதோ, அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம்", என்று கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தெரிவித்தார்.
மேலும், கண்டிப்பாக ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடிநீர் விநியோகிப்பவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும், மக்கள் பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று கூறினார்.
பின்னர் பேசிய மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் கூறுகையில், "புதிய குடிநீர் இணைப்புக்கு வரைமுறைப்படுத்த வேண்டும். புதிய இணைப்பு வழங்கும் போது, கவுன்சிலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்", என்றார்.
தொடர்ந்து, 60வது வார்டு சிங்கை சிவா கூறுகையில், தண்ணீர் வேகமாக வருவதில்லை. நள்ளிரவு நேரங்களில் குடிநீர் விடுவதை தவிர்த்து, 2 மணி நேரம் தண்ணீர் விட்டாலும் வேகமாக விட்டால் அனைத்து வீட்டினரும் தண்ணீர் பிடிக்க முடியும். தண்ணீர் விடுபவர்களான வாட்டர்மேன்கள் சரியான முறையில் தண்ணீர் விட வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
அதேபோல, 54 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் கூறுகையில், தண்ணீர் திறந்து விடுபவர் சரிவர பதில் கொடுப்பதில்லை. சிஎம்சி காலனி பகுதியில் அதிக மக்கள் தொகை இருப்பதால், பொது குழாய் அமைத்து தர வேண்டும். தட்சன் தோட்டத்தில் அதிக நேரம் தண்ணீர் விட வேண்டும், என்றார்.
மேலும், பேசிய பிற மாமன்ற உறுப்பினர்களும் குடிநீர் சீராக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, 24 மணி நேர குடிநீர் திட்ட அதிகாரிகள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான விளக்கம் அளித்தனர்.
இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.