சிறப்பு அலங்காரத்தில் இருந்த தண்டுமாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி அக்னிச்சட்டி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவில் 2022-ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டிகள் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவையின் காவல் தெய்வங்களில் ஒருவராக தண்டுமாரியம்மன் விளங்கி வருவதாக கோவை மக்களால் நம்பப்படுகிறது. சுமார் 200-ஆண்டுகள் பழமை வாய்ந்த காவல் தெய்வமான தண்டு மாரியம்மன் கோவிலில் 2022-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று முக்கிய நிகழ்வாக கோனியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அக்னிச்சட்டி, பூங்கரகம், பால் காவடி மற்றும் அலகு குத்தி, ஒப்பணக்கார வீதி, சிரியன் சர்ச் சாலை, பூரூக் பாண்டு சாலை, நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, வழியாகஅருள்மிகு தண்டுமாரியம்மன் கோவில் வந்தடைந்தனர்.
வரும் வழி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த தண்டு மாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் இந்த நிகழ்விற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் காளி வேடம் அணிந்து ஊர்வலம் வந்தனர்.