கோவில்பாளையத்தில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவில்பாளையத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தனியார் நீட் பயிற்சி மையத்தின் விடுதியில் (ஸ்ரீவாரி மெடிக்கல் அகாடமி ) கடந்த ஏப்ரல் 1-ம் தேதி ஸ்வேதா (18) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தரப்பில் காதல் விவகாரத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மாணவியின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தனது மகளின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் (தற்கொலை செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரம் இல்லை, தாமதமாக தெரிவித்துள்ளனர். புலனாய்வு துவங்கும் முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அகாடமி நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவில்லை, ஆசிரியர் தவறாக பாடம் நடத்தியதை சுட்டி காட்டியதற்கு நிர்வாகம் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி உள்ளனர். இதற்கு முன்பே ஒரு பெண் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதால் தனது மகளை அச்சுறுத்தல் செய்துள்ளனர்.) இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த மாணவியின் பெற்றோர், மாணவியின் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பேசிய அர்த்தனாரிபாளையம் (மாணவியின் ஊர்) ஊராட்சி மன்ற தலைவர் குலோத்துங்கன், மாணவியின் உயிரிழப்பு குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்பே அந்த அகாடமியில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து உள்ளதாக மாணவி தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர் இதனால் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்தார்.