பல்வேறு கோரிக்கைகள் மாமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டாலும், தினசரி கழிவுகளை நீக்க வேண்டும் என்பதும் குடிநீர் விநியோகம் சரிவர நடைபெற வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலர்களுக்குள் சீனியாரிட்டியின் அடிப்படையில் நடக்கும் அரசியலினால் தண்ணீர் விநியோகம் என்பது சீரற்றதாக உள்ளது என கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தெரிவித்தார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டல மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தலைமையில் இன்று மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டல உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் குடிநீர் வினியோகம், பிரதான சாலைகள் சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மாமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டாலும், பிரதான கோரிக்கையாக தினசரி கழிவுகளை நீக்க வேண்டும் என்பதும் குடிநீர் விநியோகம் சரிவர நடைபெற வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது.
31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்களது வார்டுக்கு சூப்பர்வைசர் தேவை என்று கோரிக்கை வைத்தார். மேலும், வார்டு வாரியாக வார்டு அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 67-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்தாபுதூர், ராம்நகர் பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லை என்பதனால் இரண்டு குப்பை தொட்டிகள் அதிகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து 48-வது வார்டு மற்றும் 65-வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பிரச்சினையே பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆகவே, இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கோட்டைமேடு பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆகவே, அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அந்த வார்டு மாமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கூறியதாவது:-
அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசு அலுவலர்களிடம் அதற்கான கடிதங்கள் மாமன்ற உறுப்பினர்கள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும், அதன் அடிப்படையில் கோரிக்கைகள் தரவரிசை பிரிக்கப்பட்டு அதனை உடனடியாக செய்து முடிக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் பதில்கள் மட்டும் கூறாமல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். சீனியாரிட்டியின் அடிப்படையில் நடக்கும் அரசியலினால் தண்ணீர் விநியோகம் என்பது சீரற்றதாக உள்ளது அதனை சரி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, 70 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் முக்கிய இடங்களான ரேஸ்கோர்ஸ் மற்றும் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதிகளில் எவ்வாறு அனைத்து பகுதிகளும் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறியதாவது:-
பெரும்பாலான இடத்தில் உப்பு தண்ணீர் குழாய்கள் அமைக்கப்படுவதில் சீர்கேடுகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து அரசு அலுவலர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட வீடுகளுக்கு உப்பு தண்ணீர் குழாய்களை பதித்து தரப்படுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதற்கு உதவி மத்திய மண்டல உதவி ஆணையர் கூறியதாவது:-
இவ்வாறான முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கூறுகையில், இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் முடிவில் அனைத்து மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னிலையிலும் அனைத்து பொருட்களின் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.