கோவையில் தண்ணீருக்காக காட்டை விட்டு, விவசாய நிலத்திற்குள் வந்த யானை கூட்டம் மின் வேலியை கடக்க சிரமப்பட்டு வந்ததை பார்த்த கிராம மக்கள், எப்படியாவது அவை பத்திரமாக சென்று விட வேண்டும் என்று அவற்றை வழிநடத்துவது போல பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோடை காலம் என்பதால் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காட்டை விட்டு தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது என்பது கோவை மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல.
பொதுவாக, குடியிருப்பு அல்லது வனத்தை ஒட்டியுள்ள சாலையில் யானை கூட்டம் கடப்பதை கண்டாலே, அவற்றை அச்சுறுத்துவது, மேள தாளங்கள் அடிப்பது, பட்டாசுகள் வெடிப்பது, கற்களை கொண்டு எரிவது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட கூடாது என்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சிலரின் அறியாமையாலும், மூர்க்கத்தனமான நடவடிக்கைகளாலும் வன உயிர்கள் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் தேவராயபுரம் பகுதியில் குட்டியுடன் வந்த யானைக் கூட்டம் ஒன்று மின் வேலியை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஐயோ பச்ச புள்ள...சாமி பார்த்து போங்க...சாமி....அவ்வளவு தான் பத்திரமா புள்ளைய கூட்டிட்டு போயிருங்க சாமி என்று கொங்கு வட்டார வழக்கில், அந்த யானை கூட்டம் பத்திரமாக செல்வதை உறுதி செய்த அப்பகுதி மக்களின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாம் பேசுவது அந்த யானை கூட்டத்திற்கு ஒன்றும் புரிய போவது இல்லை என்றாலும் கூட, மனிதர்கள் என்ன மிருகம் என்ன உயிர் உயிர் தானே என்று அவற்றின் பாதுகாப்பாக எப்படியாவது கடந்து காட்டுக்குள் சென்று விட வேண்டும் என்று கள்ளம் கபடம் இல்லாமல், பரிதவித்த அப்பகுதி மக்களின் நல் உள்ளம், மனிதாபிமானமும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றே. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.