பிரதமர் மோடி படம் அகற்றப்பட்ட தகவலறிந்த பாஜகவினர் கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கைது செய்தனர்.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பிரதமர் மோடி படத்தை அகற்றியதை, கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி, பல்வேறு அரசு அலுவலகங்களில் பாஜக கட்சியினர் பிரதமர் மோடியின் படத்தை மாட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள செயல் அலுவலர் அறையில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை இன்று காலை மாட்டிச் சென்றனர்.
இதையடுத்து, வெள்ளலூர்பேரூராட்சி வார்டு உறுப்பினர் கனகராஜ் என்பவர் செயல் அலுவலர் அறையில் மாட்டி இருந்த பிரதமர் மோடி படத்தை கழற்றிக் அப்புறப்படுத்தினார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதகவலறிந்த பாஜகவினர் கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுக வார்டு உறுப்பினர் கனகராஜை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.